Friday, January 11, 2013

காதல்

காதல்- பிரெஞ்சு எழுத்தாளார் மப்பாசனின் சிறுகதை

சமீபத்தில் ஒரு நாளிதழில் துயரமான காதல் செய்தி ஒன்றை படிக்க நேர்ந்தேன். ஒருவன் ஒரு பெண்ணை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் அவளை காதலித்திருக்க வேண்டும். அவன் யார்?அவள் யார்? எவ்விடத்தை சேர்ந்தவர்கள் என அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் ஒன்றும் எழவில்லை. ஆனால் அவர்களின் காதல் ஏனோ என்னை கவர்ந்தது. அந்த சம்பவம் என்னை துயரத்திலோ , வியப்பிலோ ஆழ்த்தவில்லை. ஆனால் என் கவனத்தை கலைத்தது, ஏனோ என்னை நெகிழ வைத்தது,. இளமை வயது நினைவினை ஞாபகமூட்டியது. ஆதி கிறிஸ்தவர்கள் முதன் முதலில் சிலுவையை கண்டுகொண்ட போது அடைந்த பரவச உணர்வினை போல, ஒருமுறை வேட்டையாட சென்ற போது, நான் காதலெனும் உணர்வை பூவுலக சொர்கத்தின் நடுவிலே முதன் முதலாக அறிய நேர்ந்த ஒரு விசித்திரமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

நீங்கள் காலாற உலாவ செல்கையில், பதட்டத்துடன் உங்களை கடந்து செல்லும் ஒரு மனிதனுக்குரிய உணர்வுகளுடனும், உந்துதல்களுடனும்தான் பிறந்து வளர்ந்தேன். நண்பர்களின் ஆரவார வெற்று வாதங்களால் உள்ளூர எரிச்சலடைந்தாலும், அதனை அங்கு வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தும் அளவிற்கு பக்குவமுடையவன். வேட்டையாடுதலில் அலாதியான ஆர்வம் உள்ள என்னை, துப்பாக்கி குண்டால் காயம்பட்ட ஒரு விலங்கையோ, சிறகுகள் முழுக்க இரத்தத்தோடு என் கையில் அகப்பட்ட பறவையின் துடிப்பையோ காண நேரும் தருணங்கள், வேட்டையாடுவதையே நிறுத்தும் அளவிற்கு வேதனையடையவே செய்யும்.

எதிர்பார்த்ததை விட முன்னதாக அந்த வருடத்தின் கூதிர்காலம் இலையுதிர் காலம் முடிந்தவுடனே வந்துவிட்டதால், என் மைத்துனன் கெர்ல் டே ரவுலே அவனுடைய சதுப்புநில வேட்டைக்கு துணையாக என்னை அழைத்திருந்தான். சிவந்த மயிர்கற்றைகள் நெற்றியில் ஆடும், தாடி வைத்த, தடித்தவனான அவன் நாட்டுபுறத்தில் வசிக்கும் ஒரு கனவான். பிரெஞ்சுக்காரர்களுக்கே உரிய, எப்போதும் பேச்சில் சிரிப்பினை வரவழைக்கும் உற்சாகம் நிரம்பி வழியும் அவனிடம். சில சமயங்களில் முரடனாக தெரிவான் இருப்பினும், விருந்தினர்கள் சிடுமூஞ்சினராக அமைந்தாலும் உபரசரிப்பதில் நல்ல பண்பாளன்.

இருபுறமும் அகன்ற பசுமையான பள்ளத்தாக்கிற்கு நடுவே, ஒரு அழகான நதியின் கரையில் அமைந்திருக்கிறது அவனது பண்ணைவீடு. நெடுங்காலமாக வளர்ந்து உயர்ந்து நிற்கும் மரக்கூட்டங்களை அதன் இருபுறங்களிலும் கொண்ட மலைக்கு அருகே அமைந்திருந்த அந்த வீட்டை பெருந்தோட்டத்தின் நடுவே உள்ள பசுமை குடில் என்று கூட சொல்லலாம். பிரான்ஸில் வேறெங்குமே இல்லாத வேட்டைக்குரிய காட்டுக்கோழிகள் அந்த பிரதேசத்தில் மட்டுமே அதிகமாக காணக்கிடைக்கும். கழுகுகளும் அவ்வப்போது வேட்டையாடப்படுவதுண்டு. மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களில் என்றுமே காண முடியாத, நாடு விட்டு நாடு பறக்கும் பறவை கூட்டங்களும், அவைகள் இரவில் இளைப்பாற வளர்ந்திருக்கும் பசுமையான கருவாலிமரகூட்டங்களும், வழியெங்கும் நிறைந்து, அங்கு மனித வாசனையே படாத இடம் உள்ளே இருக்கிறது என்று முன்னறிவிக்கும்.

அந்த பள்ளத்தாக்கை தாண்டினால், புதர்களால் வேலி அமைக்கப்பட்டு, சிறு நீர்பள்ளங்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு வளர்க்கப்பட்ட புல்வெளி மைதானம் உள்ளது. அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் நதியின் மறுகரைக்கு அப்பால் ஒரு நீண்ட சதுப்பு நிலம் விரியும். கர்ல் தனது சிரத்தையான உழைப்பினால் பசுமை மாறாமல் பராமரித்த அந்த சதுப்பு நிலமே, நான் பார்த்த்திலே மிகச்சிறந்த வேட்டையாடும் இடம். சரசரக்கும் கோரைப்புற்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்ட அமைதியான நீர் ஓடைகளும், அதில் மூங்கில் கம்புகளே துடுப்பாக கொண்டு செலுத்தப்பட்ட அடிதட்டையான சிறிய படகுகளின் வரிசையும் அமைந்திருந்தன . நீரோடைக்குள் துள்ளி விளையாடும் மீன்கள் ஆங்காங்கே நாணற்புற்களுக்குள் அடைக்கலம் புக, அந்த மீன்களை விரட்டி விளையாட காட்டுக்கோழிகள் சிறகுகள் படபடக்க தாழ பறக்கும்.

நீர்நிலைகளை காண்பது என்றுமே எனக்கு பரவசமூட்டும் செயல், அதிலும் முக்கியமாக அடங்காமல் ஆர்ப்பரிக்கும் பரந்த கடலை கண்டு லயிப்பது எனது முதன்மையான பொழுதுபோக்கு . மாறாக ஆறு, தன் இருப்பில் பேரழகாக தோன்றினாலும், அந்த நிலையில்லாத ஓட்டம் ஏனோ என் மனதின் ஓரத்தில் வெறுமையையே நிரப்பும். இவையிரண்டையும் விட எண்ணிலடங்கா பெயரறியாத உயிர்களை தன்னுள் பொதித்து துடித்துகொண்டிருக்கும் சதுப்பு நிலமே என் முதல் விருப்பம். விசித்திரமான சப்தங்கள், தனக்கான தாவர வர்க்கங்களுடன் ஏதோ மர்மமான புதிர்போன்ற தனித்த உலகமாக இயங்குகிறது. சேற்று குழம்புகள் நிரம்பிய சதுப்பு நிலம் போன்ற அலாதியான, தவிப்பு நிறைந்த, சில தருணங்களில் அச்சமூட்டும் இடம் வேறு எதுவுமில்லை. நீரால் சூழப்பட்ட இந்த தாழ்ந்த நிலம் மீது ஏன் அச்சம் எப்போதும் அழுத்தியபடி இருக்கிறது? புற்களின் சரசரக்கும் ஒலியா? நம் ஆழத்து நரம்புகளை கூச செய்யும் பூச்சிகளின் குறுகுறுக்கும் ஓசையா? நிலவில்லா இரவில் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாத புகைபோன்ற ஒளிப்பிரவாகமா? அதன் மீது எப்போதும் கவிழ தயாராக தொங்கிக் கொண்டிருக்கும் பனி என்னும் போர்வையா? பரம ரகசியத்தை கொண்டிருக்கும் பெயரறியாத ஒரு தூரத்து தேசத்தை போன்ற நிசப்தமா அல்லது அதை அவ்வப்போது கலைத்துவிடும் இடியா? ஒருவேளை இந்த மர்ம்மான, ஈரமான, தேங்கிய சேற்று தண்ணீருடன் சூரிய கிரணங்கள் சந்தித்த ஏதோ ஒரு தருணமே ஆதி முதல் உயிரின் தொடக்கமாக இருந்திருக்குமோ?

கர்ல் அழைத்த அன்று மாலையே நான் அவன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த ஊருக்கு வரும் வழியேங்கும் சதைகளின் ஊடே சென்று எலும்புகளை இரண்டாக வெட்டுவது போல குளிரடித்த்து.

நாங்கள் அன்று இரவு உணவு அருந்திய விசாலமான அறையில் பஞ்சால் நிரப்ப்பட்டு ஆணிஅடிக்கப்பட்டு கிளைகளில் பாடம் செய்யப்பட்ட பறவைகளின் மாதிருயுருக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பலவிதமான பருந்து, கருடன், நாரை, ஆந்தை, பக்கி, வல்லூறு, ராஜாளி, கழுகுகள் அச்சமூட்டும் வித்த்தில் அறையின் ஒரு பக்கசுவர் முழுவதிலும், மேற்கூரையிலும் நிரம்பியிருந்தன. விசித்திரமான மூக்குடன், சிறகுகள் விரிந்தது போன்ற சீல்தோலினாலான ஆடை அணிந்து அறைக்குள் நுழைந்த கர்ல் கூட அந்த பறவைக்கூட்டத்தின் ஒருவன் போல எனக்குதோன்றினான்.

வேட்டையான உகந்த இடத்தை தேர்ந்தெடுக்க, முதலில் அங்கிருந்த ஒரு மேட்டுநிலத்திற்கு சென்று நோட்டமிடுவதுதான் திட்டம். அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து நான்கரை மணிக்குள் அங்கு சென்றுசேர முடிவு செய்திருந்தோம். அந்த மலைமுகட்டில் ஏற்கனவே பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட ஒரு குடில் நாங்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த்து. விடியற்காலை பனிக்காற்று, ரம்பத்தை கொண்டு சதையை அறுப்பது போல, விஷ ஊசியினால் தசையில் குத்துவது போல, பிட்டங்களை கொள்ளிக்கட்டையால் வருடுவது போல, குறடு கொண்டு நகசதையை திருகுவது போல, வீசுப்போகிறது, அதிலிருந்து நாங்கள் தப்பித்து ஒதுங்குவதற்கான மறைவிடம் அங்கு அது ஒன்றுதான்.

உள்ளங்கைகளை அழுத்தமாக தேய்த்தபடி “இந்த அளவிற்கு குளிரை நான் இதற்கு முன்னர் பார்த்த்தே இல்லை, இன்று மாலை 6 மணிக்கே பூஜ்ஜியத்திற்கு கீழே 12 டிகிரி சென்றுவிடட்து” என்றான் கர்ல்.

இரவு உணவு முடிந்த உடனேயே, கணப்பு தொட்டியின் தீக்கனலை பார்த்துக் கொண்டே, படுக்கைக்குள் என்னை பொருத்திக்கொண்டு உறங்கிவிட்டேன். சரியாக மூன்றரை மணிக்கு கர்ல் என்னை எழுப்பினான். குளிருக்கு நான் ஆட்டுதோலாலான மேலாடையும் அவன் கரடித்தோலாலான மேலாடையும் அணிந்து தயாரானோம். ஆளுக்கு ஒரு குவளை கொடுஞ்சூடான தேநீரை விழுங்கினோம். போதுமான அளவு பிராந்தியை புட்டியில் நிரப்பிக்கொண்டு, உதவிக்கு ஒரு வேலையாளும், எங்கள் வேட்டை நாய்கள் பியாரெட், பிளாஞ்சியனும் சூழ புறப்பட்டோம்.

கதவைத் திறந்து வெளியே வந்த முதல் நொடியிலேயே, குளிர் எலும்பு மஞ்ஞைக்குள் ஊடுறுவி ஜில்லிட்ட்து. வெட்ட வெளி சலனமில்லாமல் உறைந்து போயிருந்தது. நேற்றிரவு மொத்த பூமியும் குளிரால் மாண்டு போனது போலும். தாவரங்கள், பூச்சிகள், மரங்கள் மீது , குளிர் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து குத்திட்டு நின்று, உலர்த்தி தின்றுகொண்டிருந்த்து. கிளைகளிலிருந்து தவறி விழும் சிறிய பறவை தரையைத் தொடும்முன் குளிரில் விறைத்து கல் போல விழும் என எனக்கு தோன்றியது.

நான்காவது ஜாமத்தின் கடும் பனிபொழிவு, சிமிட்டவும் கூட சக்தியில்லாமல் வானத்தில் நிலவை முடக்கியது போலும். தேய்பிறையின் கடைசி நாட்களில் ஒன்றான அன்று பிறைச்சந்திரன் துயர்மிகு ஒளியை உதிர்த்தவாறு மெல்ல தயங்கி வானத்தில் சரிந்து கொண்டிருந்தது.

பனிக்காற்று எங்களை பின்னோக்கி தள்ள, துப்பாக்கிகளை கக்கத்தில் இறுக வைத்துக்கொண்டு, முன்கைகள் முழுவதும் பேண்ட் பாக்கேட்டில் நுழைத்து, நானும் கர்லும் இணையாக நடந்து சென்றோம். உறைந்த நதியின் பனிபரப்பின் மீது நடக்கையில் வழுக்காமல் இருக்க, பூட்ஸ்களை கம்பளித்துணியால் கட்டியிருந்தோம். அது ஓசை எதுவும் எழுப்பவில்லை. நாய்கள் சிகரெட் புகைபோல வெள்ளை புகை எழுப்பி மூச்சு வாங்கி ஓடி வந்தன.

விரைவிலேயே அந்த சதுப்பு நிலத்திற்கு கூட்டி செல்லும் ஒற்றையடிப்பாதைக்கு வந்து சேர்ந்தோம். அந்த புதர்செடிகள் சூழ்ந்த பாதை வழி நுழைந்தோம். கவிந்திருந்த ரிப்பன் வடிவ இலைகள் எங்கள் முழங்கைகளை உரசி,’சவுக்’ ‘சவுக்’ என ஒலியெழுப்பி காதுக்கு பின்னால் மீண்டன. பாதை ஒரு சிறிய மேட்டில் சென்று முடிந்தது. அதன் மீது ஏறி, நான் கண்ட காட்சி, யாரோ என் முகுளத்தில் சுத்தி கொண்டு ஓங்கி அடித்தது போல இருந்தது. பனி! பனி ! எங்கும் உறைபனி, அந்த சதுப்புநிலம் முழுவதையும் மரணப்பனி அழுத்தியிருந்தது, சுற்றியிருந்த தாவரங்களை அந்த வெள்ளைப்பேய் கொன்று புதைந்து கொண்டிருந்தது.

சற்று தள்ளி இருந்த சிறிய மேட்டுநிலத்தில் பனிக்கட்டியால் கட்டப்பட்ட குடிலை கண்டுகொண்டோம். அதிகாலை பறவைகளின் ஓசை எங்களை எழுப்பும்வரை அங்கு ஓய்வெடுக்க முடிவுசெய்து உள்ளே நுழைந்தோம். கதகதப்பிற்கு இரண்டு அடுக்கு கம்பளிபோர்வையை சுற்றி போர்த்தி படுத்தேன். கண்ணயரத் தொடங்குவது போல இருந்தது. புரண்டு படுத்தேன். பனிவீட்டின் ஒளிபுகும் சுவர்வழியே நான்கு வெள்ளிக் கொம்புகளுடன் மங்கிய பால் நிறத்தில் உருமாறியிருந்த நிலா தெரிந்தது. சதுப்பு நிலத்தை உறைய வைத்த பனி, அசராமல் சுவர் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுறுவி என் கால்களை தொட்டு, என் தொண்டை வழியாக உச்சந்தலைக்கு சென்று ஜில்லிட்டது. கடுமையாக இருமினேன்.

பதட்டமடைந்த கர்ல் ”வேட்டையாட ஒரு பறவை, மிருகம் கூட கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நீ குளிர் காய தீ மூட்ட போகிறேன். ” என்றான். வேலையாளை அனுப்பி சுள்ளிகளை பொறுக்கி வரச் சொன்னான்.

அந்த பனிவீட்டின் மேற்கூரையின் நடுவில் புகை செல்ல ஒரு துளை இருந்தது. கீழே சுள்ளிகளை குவித்து வைத்து தீ மூட்டினோம். படிக நிற சுவர்களில் செந்நிற தீக்கனல்கள் பட்ட நொடியில், உழைக்கும் உடலில் இருந்து வியர்வை வழிவது போல, சுவர் ஓரங்கள் சன்னமாக உருகியது. புதையல் கண்டறிந்தவன் குரலில், கர்ல் “இங்கே வா! வெளியே வந்து பார்!” என்றான். கூம்பு வடிவத்தில் இருந்த அந்த குடில், உறைந்த போன நீரோடையின் மீது, திடீரென முளைத்த மாபெரும் வைரம் போல இருந்தது. குடிலின் உள்ளே குளிர் காய்ந்து கொண்டிருந்த இரு நாய்களின் நிழல்கள்களால், பட்டை தீட்டப்பட்டு நடுவே அழகிய வடிவம் செதுக்கப்பட்ட வைரமாக ஜொலித்தது.

அதிகாலை அரைமயக்கத்தில் என் முகத்திற்கு நேர்மேலே மொழியில்லாத விநோதமான குழுப்பாடல் பாடக் கேட்டு எழுந்தேன். புகைபோக்கி துளை வழியாக ஒரு பறவைக்கூட்டம், ’ட ’ வடிவத்தில் கடந்து சென்றது. கீழ்வானிலிருந்து புள்ளி பொல தொடங்கி, அம்பு போல வந்து, கூக்குரலெழுப்பி எனது துயில் கலைத்து, சாம்பல் நிற மேல்வானத்திற்கு சென்றடையும் அந்த பறவைக்கூட்டதைப் போல உற்சாகத்தை பொங்க செய்யும் காட்சி எனக்கு வேறெதுவுமில்லை. அது, கதிரவனின் முதல்கீற்று பட பனிஉருக தொடங்கும் அந்த வேளையில், பூமியின் ஆன்மா கொள்ளும் பெருமூச்சின் சாயல் தான் போலும்.

”தீயை அணைத்து விடு, விடியப் போகிறது” என்றான் கர்ல்.

வானத்தில் வெண்மை மெதுவாக வடியத் தொடங்கியது. தத்தி தத்தி வந்த ஒரு வாத்துக்கூட்டம் எங்களை கடந்து சென்றது. துடைத்து எடுத்தது போல இருந்த வானத்தில் ஒளிக்கதிர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிரம்பின. திடீரென ஒரு வெடிச்சத்தம், இரண்டு நாய்களும் அதை நோக்கி ஓடின. கர்ல்தான் துப்பாக்கியால் சுட்டான்.

அடுத்து இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை,புதர்மறைவிலிருந்து பறவைக்கூட்டங்கள் எழுந்து வானில் வந்தவுடன் துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டது. நானும் சுட ஆரம்பித்தேன். பியாரெட்டும், பிளாஞ்சியானும் முச்சிரைத்தபடி இரத்தம் கசியும் பறவைகளை களிப்புடன் கவ்விக் கொண்டு வந்து போட்டன. குவிக்கப்பட பறவைகளில் சில பறவைகள் பாதி கண்களால் என்னை உற்று பார்ப்பது போல தோன்றியது.

சூரியன் வெளிவந்துவிட்டது, துல்லியமான நீல நிறம் வானை நிறைத்த நாள் அது. நாங்கள் வேட்டை முடிந்து கிளம்பலாம் என எத்தனித்த வேளையில், கழுத்து நீண்ட இரு பறவைகள் சிறகுகளை விரித்து எங்களுக்கு தலைக்கு மேலே வெகு அருகே கடந்து போனது. நான் அனிச்சையாக அதை நோக்கி சுட்டேன். அதில் ஒன்று என் காலுக்கு அருகிலேயே வந்து விழுந்தது. அது வெள்ளி நிற மார்பும், சாம்பல் நிற உடலும் கொண்ட ஒரு வகையான வாத்து இனத்தை சேர்ந்த கிளுவை பறவை. அந்த பறவை விழுந்த சில நொடியில், வானத்தையே வெட்டியது போல ஒரு அலறல். மனதை திருக்கும் ஒர் அறுபடாத புலம்பல் போல தொடர்ந்தது. இரண்டு பறவைகளில் ஒன்று திரும்பி வந்து எனது கையில் இறந்து போயிருந்த அதன் இணையை பார்த்து துடித்தது.

தரையில் மண்டியிட்டு கவனித்த கர்ல் “நீ ஒரு பெண்வாத்தை கொன்று விட்டாய், அதன் இணை ஆண்வாத்து பறந்து தப்பிக்க பார்க்காது” என்றான்.

ஆம், அது தப்பிக்கவில்லை. எங்களை சுற்றி வட்டமடித்து கொண்டே, அழுவது போல குரலெழுப்பியது. அந்த குரல் வானத்தில் தொலைத்த தனது துணைக்காக பெரும் வலியுடன் கூடிய ஒரு தேடல் போலவும், எங்களை நோக்கிய ஆற்றாமையுடன் கூடிய மன்றாடல் போலவும் என் காதில் ஒலித்தது.

அங்குமிங்கும் நிலைகொல்லாமல் பறந்த அந்த வாத்தை நோக்கி கர்ல் துப்பாக்கியால் குறி பார்த்தான். தனது இணையை விட்டு அது பறந்து செல்ல போகிறதோ என நினைத்த, மறுகணம் அது திரும்பி எங்களை நோக்கி நேராக பறந்து வந்தது.

”அவளை கீழே போடு. அவன் அருகில் வருவான் பார்!” என்றான் கர்ல். உயிர்கொல்லும் ஆபத்தை கூட உணரும் நிலையில் இல்லாமல், நான் கொன்ற பெண்ணின் மீதான காதலின் கயிறு அந்த ஆண்வாத்தை இழுத்தது.

கர்ல் சுட்டான். அந்த ஆண்வாத்தையும் எங்களையும் சேர்த்திருந்த நூல் அறுந்தது போல, புதர்கூட்டத்தில் விழுந்தது. பியாரெட் கொண்டு வந்து அதை எங்கள் காலடியில் போட்டது.

ஏற்கனவே பறவைகளை சேகரித்த பையில் அந்த இரண்டு பறவைகளையும் ஒரு சேர வைத்தேன். அன்று மாலையே பாரீஸ்க்கு திரும்பி விட்டேன்.

<முற்றும்>

Wednesday, July 27, 2011

அவன்? - மப்பாசன்

பிரெஞ்சு  எழுத்தாளர் மப்பசானின் (Guy de maupassant)       சிறுகதை- அவன்?  (He?) மொழியாக்கம்

அவன்?  

               எனதருமை நண்பனே, எந்தவகையிலும் இதை புரிந்துகொள்ள முடியவில்லையென  கூறினாலும், உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக பைத்தியமாகி வருவதாக நீ கருதுகிறாய் இல்லையா?, ஒருவேளை உண்மையாக இருக்கலாம், ஆனால்  நீ நினைக்கும் காரணங்களுக்காக இல்லை.

                ஆம், நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். அந்த முடிவினை நோக்கி இட்டு சென்ற சம்பவத்தைப் பற்றி கூறுகிறேன்.

                என்னுடைய கொள்கைகளும், திடநம்பிக்கைகள் சிலவும் மாறவேயில்லைதான். நான்  இன்றும் சட்டப்பூர்வமாக சேர்ந்துவாழ்வதை  முற்றிலும் மடத்தனமான சம்பிரதாயமாகவே பார்க்கிறேன், ஏனென்றால் பத்திற்கு ஒன்பது கணவன்மார்கள் மனைவிக்கு துரோகம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் என்பது என் உறுதியான எண்ணம்.  அவர்கள்  சுதந்திரத்தை துறந்து, அசட்டுத்தனமாக தானாகவே முன்வந்து காதலின் கைவிலங்குகளுக்குள் வாழ்க்கையை மாட்டி விட்டதால், அனுதாபப்படவும் தகுதியில்லாதவர்கள்.  வசீகரமான பெண்களை நோக்கி இடைவிடாது, பறக்கும் கற்பனை சிறகுகளை வெட்டிவிட்ட பரிதாபத்திற்குரியவர்கள். நான் சொல்வதன் பொருள் உனக்கு நன்றாகவே தெரியும். என்னால், ஒரே ஒரு பெண்ணை மட்டுமே காதலிப்பது எந்த ஒரு தருணத்திலும் இயலாது என உணர்ந்திருக்கிறேன். ஏனென்றால் எப்போதும் அளவுகடந்த ஆசையுடன் பெண்கள் அனைவரையும் ஆராதிக்கிறேன். ஒரே நேரத்தில், விதம்விதமான மோகனப் பெண்களின் பெருந்திரளை, என்னுடைய அணைப்பிற்குள் கொண்டு வர, ஆயிரம் கரங்களையும், ஆயிரம் உதடுகளையும், ஆயிரம் உணர்ச்சிமிகு இதயங்களையும் வேண்டி விரும்புகிறேன்.

               இருந்தாலும், நான் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன்.

                அதோடு, என் மனைவியாகவிருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி நான் அறிந்தது, மிகவும் குறைவே. அவளை நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறேன். உவப்பில்லாதது எதுவும்  அவளிடம் இல்லையென்பதே இப்போதைய என் தேவைக்கு போதுமானது. அவள் தடித்த, குட்டையான , சிவந்த பெண், ஆதலால், நாளை மறுநாளே நிச்சயமாக ஒல்லியான, உயரமான, கருத்த ஒரு பெண்ணிற்காக நான் ஆசைகொள்ளலாம்.

              அவளொன்றும் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்ணுமில்லை, சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். அவள் ஒரு வகையில், திருமண பந்தத்திற்காக பொருத்தமான வரையறைக்குள்  வளர்க்கப்பட்ட, எங்கும் காணக்கிடைக்கும் உதாரண மங்கை. அதே சமயம் வெளித்தோற்றத்தில் எந்தவிதமான குறையும் இல்லாமல், அதைத் தவிர வேறெந்த கவரும் அம்சங்களும் கிடைக்க பெறாதவள்கூடத்தான்.  அண்டை வீட்டார், உற்றார் உறவினர்களால் இன்று அவள்செல்வி. லஜோலா ஒரு பண்பான பெண்.” எனவும், இன்னும் சில நாட்களுக்குப் பிறகுதிருமதி. லஜோலா என்ன ஒரு அருமையான இல்லத்தரசி!!” எனவும் அழைக்கப்படுவதற்கு ஏற்றவள். ஒரே வரியில் சொல்வதென்றால், நமக்கு மனைவியாக இருக்கும் அந்த ஒரு பெண்ணைத் தவிர வேறு எல்லா பெண்களிடமும் நாட்டம் இருப்பதை நாம் உணரும் நாள் வரை, நம்மைப் போன்றவர்களுக்கு மிகப் பொருத்தமான மனைவியாக அமையப் போகும் , எண்ணற்ற பெண்கள்கூட்டத்தில் ஒருத்திதான்  இவள்.

             ”இதெல்லாம் சரிதான், பிறகு என்ன காரணத்திற்காக நீ திருமணம் செய்யப் போகிறாய்????” என்று நீ என்னிடம் கேட்பாய்.

             இந்த மடத்தனமான செயலை செய்யத் தூண்டிய அந்த விசித்திரமான, நம்பமுடியாத காரணத்தை உன்னிடம் வெளிப்படையாக சொல்வதற்கு தயக்கமாக உள்ளது. இருந்தாலும் சொல்கிறேன். என்னைதனிமைஅச்சுறுத்தி துரத்துகிறது. இதை எப்படி சொல்லி , உனக்குப் புரிய வைக்கப் போகிறேன் எனத்தெரியவில்லை. என்மனப்பிறழ்வு கண்டு, நீ இரக்கப்படலாம் அல்லது என்னை இகழ்ந்து வெறுத்து ஒதுக்கலாம். நீ என்னைப் பற்றி என்ன நினைத்தாலும், இனிமேல் என்னால்  இரவில் தனியாக இருக்க இயலாது. எனதருகில் ஒரு மனித இருப்பையாவது நான் உணர வேண்டும், என்னைத் தொட, என்னுடன் உரையாட, யாராவது எனக்கு வேண்டும்.

           எதிர்பாராத கணங்களில் என் மனதில் தோன்றும் கேள்விகளை பொருட்படுத்தி  காது கொடுத்து கேட்பதற்கும், எப்போதும் ஒரு விழித்திருக்கும் ஆன்மாவையாவது நெருக்கமாக உணருவதற்கும், நான் சோர்வுற்று இளைப்பாறும் போது,  ஒரு மனிதக் குரலையாவது கேட்பதற்கும், பதற்றத்துடன் மெழுகுவர்த்தி ஏற்றும் தருணங்களில் அந்த மங்கிய விளக்கொளியில் ஒரு மனித முகத்தையாவது பார்ப்பதற்கும், எவராவது ஒருவராவது என்னருகே வேண்டும்.ஏனென்றால்ஏனென்றால்வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன்... ”தனிமையைக் கண்டு நான் பயப்படுகிறேன்”.

             , நண்பனே, இன்னும் என்னை புரிந்துகொள்ள முடியவில்லை தானே!!!

             உயிர்கொல்லும் அபாயங்களை கண்டு கூட நான் ஒருபோதும் அச்சப்படதில்லை, திடீரென்று அறைக்குள் புகுந்த முன்பின் தெரியாத வேற்று மனிதனை, துளி கூட நடுக்கமில்லாமல் என்னால் இப்பொதும் கொலை செய்ய முடியும். பேய், பிசாசுகளை பற்றி எனக்கு பயமில்லை. வேறு எந்த மூடநம்பிக்கைகளும் இல்லாதவன்தான். இறந்த மனிதர்களின் நினைவுகள்கூட என்னை அச்சுறுத்துவதில்லை, மரணத்திற்குப் பிறகு உடலோடு சேர்ந்து ஆன்மாவும் பூரணமாக இந்த மண்ணிலிருந்து அழிகிறது என நம்புகிறவனும் தான். இருப்பினும்....

             அதை.. அதைஅதைச் சொல்லியே ஆக வேண்டும், எனக்கு என் மீதுதான் பயம். புரிந்து கொள்ளமுடியாத, பயங்கரமான, கலவர நிலையில் என்னை எப்போதும் வைத்திருக்கும் அந்த தனிமையின் மீதுதான் பயம்.

             நீ என் நிலையை நினைத்து மனமார சிரிக்கலாம், இந்த கொடூரமான பயத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. என்னை சுற்றி எழும்பியுள்ள சுவர்களும், இந்த அறைகலன்களும், உயிருள்ளைவை போன்று தோற்றம்தரும் இந்த பொருட்களும், என் மிருக வாழ்க்கையை மீண்டும் மீண்டும் நினைவூட்டி அச்சுறுத்துகின்றன. இதையெல்லாம் விட, விடாது துரத்தும் ஒரு எண்ணம், என்னை விட்டு விலகியது என நான் நம்பிக்கையுடன் இளைப்பாற போகும் கணங்களில், விளங்கமுடியாத, தாங்கொண்ணா வலியுடன், என்னை சட்டென்று என்னை பற்றிக் கொள்ளும், அந்தகாரணம்என்னை அச்சுறுத்துகிறது.

            எப்போதும் முதலில், ஒரு வகையான இனம்புரியாத மன உலைச்சலை உணரச்செய்து, முழு உடலையும் நடுங்கச் செய்கிறது, அந்த அச்சம். என்னைச் சுற்றி ஒருவர் கூட இல்லையென தெரிந்த வினாடியில், தொட்டுணரத்தக்க யாரவது ஒருவராவது வேண்டுமென ஏங்க வைக்கிறது.  எனக்குள்ளேயே நான் பேசினால் கூட, என் குரலே என்னை பயமுறுத்துகிறது. என்னைத் தவிர என் வீட்டினுள் யாருமில்லையன நிச்சயமாக தெரிந்தாலும் கூட, நான் வீட்டுக்குள் நடக்கும் போது, கதவிற்குப் பின்னால், திரைச்சீலைகளுக்குப் பின்னால், அலமாரிக்குப் பின்னால் தேட வைக்கிறது. சட்டென்று திரும்பும் கணங்களில், எனக்குப் பின்னால் எதுவுமில்லை என்ன புரிந்து கொண்டாலும், அதுவே பயம் கொள்ளச் செய்கிறது.

            நாளாக நாளாக அந்த தனிமையின் அச்சம் என்னை ஆட்டுவித்து, மேலும் மேலும் அதிகரிப்பது போல உணருகிறேன். என் அறைக்குள்ளேயே அடைபட்டு, படுக்கையில், என்னுடைய போர்வைக்குள்ளே, கூனிக்குறுகி, சுருண்டு படுத்துக்கொண்டு கண்களை இறுக மூடி அப்படியே நெடு நேரம் அசையாமல் படுத்துக் கொள்கிறேன். எனதருகில் நீண்ட நேரமாக எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைக்கூட அணைக்க திராணியில்லாமல் அதனையே வெறித்து பார்க்கிறேன்.

           நண்பனே, இது மிகவும் கொடூரமான உணர்வு, இல்லையா?

           ஆனால், சில நாட்களுக்கு முன்பெல்லாம் நான் இவ்வாறு உணர்ந்ததில்லை. நான் வீட்டிற்கு வரும்போதும், எனது அறைகளுக்குள்ளுள் சென்று திரும்பும்போதும் எனது மன அமைதியை குலைக்கும் எதுவும் இருந்ததில்லை. என்னால் நம்பவேமுடியாத, இந்த மனக்கோளாறினால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என இதற்கு முன்னர் எவனாவது என்னிடம் கூறியிருந்தால், அவனை எள்ளி நகையாடியிருந்திருப்பேன்.  இருண்ட என் படுக்கை அறையின் கதவுகளை திறப்பதற்கெல்லாம் நான் எப்பொழுதும் பதற்றப்பட்டதேயில்லை. வழக்கமாக சோம்பலுடன், கதவை தாழிடாமல் சென்று படுக்கின்ற போதும், நடுஇரவில் திடுமென எழுந்து கதவுகள் தாழிட்டிருக்கிறதா என எப்போதும் நான் சரிபார்த்ததில்லை.

           இவையெல்லாம் முதன் முதலில் தொடங்கியது கடந்த வருடத்தின் ஈரம் போர்த்திய ஒரு இலையுதிர்காலத்தின் மாலைவேளையில்தான். அன்று இரவு உணவிற்குப் பின், பணியாள் அறையின் பணிகளை முடித்துவிட்டு விடைபெற்றுச் சென்ற வேளையில், எனக்குள்  நானே,  இன்றிரவு என்ன செய்யப்போகிறேனென கேட்டுக்கொண்டே,  மேல்மாடி அறையிலிருந்து மாடிப் படிக்கும், பின்பு மீண்டும் அறைக்கும் மேலும், கீழும் ஏறி இறங்கிக் கோண்டிருந்தேன். எந்த ஒரு வேலையை செய்யவும் கவனம் செல்லாமல், படிப்பறைக்கு சென்று படிக்கவும் மனதில் ஆவலில்லாமல், மிகவும் களைப்பாக இருந்தேன். அறைக்கு வெளியே, தூறலுடன் அழகிய மழை மெல்லிதாக பெய்து கொண்டிருந்தது, இருந்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை. தெளிவான எந்த ஒரு காரணமுமேயில்லாமல் ஒரு வகையான உளச்சோர்வுடன், இந்த மனச்சோர்வை பகிர யாராவது உடன் இருந்தால் நன்றாக இருக்குமே, என ஏக்கத்துடன் நடந்து கொண்டிருந்தேன்.

          மண்ணிற்கு அடியில் புதைத்துவிடும்படி தனிமை என்னை அழுத்த, சுற்றியிருந்த அறைகள் கூட என்றுமில்லாமல் முடிவில்லா வெறுமையுடன் இருப்பதாக தோன்றியது, அப்போது என்ன செய்து கொண்டிருந்தேன்? நினைவில்லையே!! ஆம், பதற்றத்துடன் கால்கள் நடுங்க காய்ச்சல் உண்டாவதற்கான அறிகுறிகளுடன் அமர்ந்திருந்தேன். எனவே, மீண்டும் நடக்கலாம் என எண்ணி எழுந்தேன். இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கட்டிக் கொண்டு, குதிக்காலால் அழுத்தி மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து, திடீரென முதுகுத் தண்டின் மையத்தில் கூர்மையாக சில்லிட்டது போல உணர்ந்தேன், ஜன்னல் வழியாக வந்த குளிர்ந்த காற்று அறையைத் தாண்டி வந்து என்னுள் ஊடுருவியிருக்கலாம். அதனால் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த அறையின் கணப்பு தொட்டியில் நெருப்பு மூட்டினேன். அதனருகிலேயே சிறிது நேரம் அமர்ந்து அந்த தணலையே உற்று பார்ந்து கொண்டிருந்தேன். சீக்கிரமே, பொறுமையிழந்து, அண்டை வீட்டு நண்பன் வீட்டில் இருக்கக்கூடுமென முடிவுசெய்து அவன் துணையை நாடி, அறையை விட்டு வெளியே கிளம்பினேன்.

          அவன் அங்கு இல்லை, இருமருங்கிலும் மரங்களின் வரிசையால் நிரம்பிய அந்த அகன்ற தெருவில், தெரிந்தவர் எவராவது ஒருவரின் துணயாவது கிடைக்குமா என காலார நடந்து சென்றேன்.

          ஆனால் அன்று துரதிஷ்டமான நாள், எங்குமே யாருமேயில்லை. அழுத்தமாக கவ்வியிருந்த மூடுபனிக்கு நடுவே, மெல்லிதான தூறலுடன், மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் நடந்து போன ஈரமான நடைபாதை என் முன்னால் சாலையோர விளக்கொளியில் மங்கலாக ஒளிர்வது போல தெரிந்தது.

           மெதுவாக நடந்து சென்ற நான் எனக்குள்ளே நொந்துகொண்டேன்இன்று ஒரு ஜீவன்கூட பேசுவதற்கு கிடைக்கப்போவதில்லை.”

       சிறிது தூரம் சென்று உணவகங்களையும், சாலையோர தேநீர் அருந்தகங்கள் சிலவற்றையும் நோட்டமிட்டேன். வரவழைக்கப்பட்டு மேஜையில் வைக்கப்பட்ட சிற்றுண்டியைக் கூட உண்பதற்கு ஆற்றலில்லாமல், துயரம்தோய்ந்த முகங்களுடன் பல தனி மனிதர்கள்,  நாற்காலிகளை நிரப்பியிருப்பதாக எனக்குப்பட்டது.       

         பிறகு நெடுநேரம் இலக்கில்லாமல் இங்குமங்கும் உலாவிவிட்டு, மன அமைதியையும், சோர்வையும் ஒரே சமயத்தில் உணர்ந்தவுடன், நடுஇரவிற்கு சற்று முன்னதாக வீட்டிற்கு திரும்பினேன். வாயில்காப்பாளான் அவனின் வழக்கத்திற்கு மாறாக உடனே  வந்து கதவை திறந்து வழிவிட்டான். அந்த செய்கை யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும் எனக் காட்டியது.

             நான் வழக்கமாக வெளியே செல்லும் சமயங்களில், என் அறையின் கதவுகள் ஒன்றிற்கு இரண்டு முறை பூட்டப்பட்டிருக்கிறதா என சரிபார்த்துவிட்டுதான் செல்வேன்.  ஆனால் அன்று நான் வீடு திரும்பி என் அறைக்கு சென்றபோது, அது வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. அதனைக் கண்டு வியப்படைந்தாலும். வெளியே சென்ற இடைவெளியில் எனக்கு யாராவது கடிதம் கொடுக்க அறைக்குள் வந்திருக்கலாமென எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

           என் அறைக்குள் நுழைந்த போது, கணப்பு தொட்டியில் நெருப்பு ஆரவாரமின்றி இன்னும் எரிந்துகொண்டிருந்தது, ஆனாலும் அறை ஒரளவிற்குதான் வெளிச்சமாக இருந்தது. அப்போது மெழுவர்த்தியை எடுத்து ஏற்றி வைக்க எத்தனித்தபோதுதான், யாரோ ஒருவர் கணப்பு தொட்டியின் நெருப்பிற்கு வெகு அருகில் கைநாற்காலியில் தேய்ந்து போன கால்களுடன், முதுகு மட்டும் தெரியும்படி அமர்ந்திருப்பதை கவனித்தேன்.

          திடீரென்று கவனித்தாலும், அந்த காட்சி என்னை கொஞ்சங்கூட அச்சமடையச் செய்யவில்லை. அவர் என் நண்பர்களில் ஒருவர் அல்லது என்னை பார்க்க வந்த யாராவது ஒருவராகத்தான் இருக்ககூடும் என முடிவுசெய்து கொண்டேன். நான் வெளியெ சென்ற சமயத்தில், வாயில்காப்பாளான் அவருக்கு என்னுடைய அறையின் மற்றொரு சாவியை கொடுத்திருக்ககூடும். வீடு திரும்பிய தருணத்தில் வாயில் கதவு உடனடியாக திறக்கப்பட்டதையும், என் அறைக்கதவு பூட்டப்படாமல், சாத்தப்பட்டிருந்ததையும் மீண்டும் நினைவிற்கு வந்தது.

      
            அந்த நண்பரின் பின்னந் தலையை தவிர வேறொன்றும் தெளிவாக எனக்கு தெரியவில்லை. எனக்காக காத்திருந்த சமயத்தில் அவர் களைத்து தூங்கியிருக்கிறார். அவரை எழுப்ப மெதுவாக அவருக்கு முன்னால் சென்றேன். இரண்டு கால்களையும் மடித்து வைத்து, வலது கையை மட்டும் கீழே தொங்கபோட்டு அமர்ந்திருந்தார், தலை இடது பக்கம் சாய்ந்திருந்ததால், அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பது போல தோன்றியது. ”யாராக இருக்க கூடும்?” எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். அறையின் அந்த பகுதி இருட்டாக இருந்ததால், அவரின் முகம் சரியாக தெரியவில்லை. எனவே அவரின் தோளை குலுக்கி எழுப்புவதற்கு எனது வலது கையை மெதுவாக உயர்த்தி எடுத்து சென்றபோது, கைகள் நேராக நாற்காலியில் போய் முட்டியது. அங்கு யாருமேயில்லை. நாற்காலி காலியாக இருந்தது.

             திகிலில் என் உடல் சிலிர்த்து விறைத்து நின்றது. சாவகாசமாக நடந்து போகின்ற வழியில் நடுக்கமூட்டுகிற அபாயம் திடீரென முன்னால் வந்து நின்றால் அங்கிருந்து வேகமாக விலகுவது போல, அந்த காட்சியைக் கண்டு அனிச்சையாக சில அடிகள் நகர்ந்து பின்வாங்கினேன். சில நொடிகளில் என்னை தொகுத்துக்கொண்டு, வீராப்புடன், அப்படி என்னதான் நடக்கும் என கைநாற்காலிக்கு அருகில் மீண்டும் சென்றேன். மயங்கி விழப்போகும் தருணத்தில் இருப்பவன் போல, எண்ணங்கள் தாறுமாறாக சிதற, பதைபதைப்புடன், உறைந்து நின்றேன்.

            இயல்பாகவே நான் அசட்டு தைரியமிக்கவன், அதனால் சீக்கிரமே சமநிலைக்கு வந்தேன். “அட. இது வெறும் பிரமைப்பா!!”  என திரும்ப திரும்ப எனக்குள் சொல்லிக்கோண்டேன், மனதின் எண்ணங்கள் கட்டுப்பாடில்லாமல் அலைய, சில நிமிடங்கள் கடந்தன. இது உண்மையிலேயே வெறும் மனபிரமையாக இருக்கலாம். முன்னரே சில தருணங்கள் இதேபோல் மனபிரமையால் பீடிக்கப்பட்டிருக்கிறேன் என என் நினவிற்கு வந்தது. எனது மனதிலோ, மூளையிலோ எந்த ஒரு கோளாறுமே இல்லை, அது கண்ணாடி போல தெளிவாகவும், தர்க்கபூர்வமாகவும் இயங்குகிறது. ஆனால் இந்த கண்களால்தான் ஏமாந்திருக்கிருக்கிறேன். நகரத்திற்கு புதிதாக வந்த பாமரன் தான் கண்ட முதல் சாதாரண காட்சியைக்கூட  அற்புதமென கருதி வியப்பதைப்போல, இந்த கண்கள் ஒரு சாதாரண நிகழ்வை மாயக்காட்சி போல கற்பனை செய்து என்னை தடுமாற வைத்திருக்கிறது. ஆம், அதீதமாக களைப்படைந்த கண்கள், அறைக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட பார்வைக்கோளாறால் உணரப்பட்ட வெறும் திரிபுக்காட்சிதான் வேறொன்றுமில்லை.
அறையின் அணைந்தபோன மெழுவர்த்தியை மீண்டும் ஏற்றினேன். அப்போது தணலின் நெருப்பை கிளர்ந்தெழச் செய்ய சில மரக்கட்டைகளை சேர்க்க குனிந்தபோது, திடீரென பின்னால் இருந்து என்னை யாரோ தொடுவது போலயிருந்தது. உடல் முழுவதும் விதிர்விதிர்க்க, சட்டென ஏதோ விசைதள்ளியது போல பீதியில் பின்னால் நகர்ந்தேன்.

          இந்த முறை எந்தவகையிலும் எனது இழந்த தைரியத்தை மீட்கமுடியவில்லை. தைரியம் வரவழைக்க எனக்கு தெரிந்த கடவுள் வாழ்த்துப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே, மாடிபடிகள் வழியாக வேகமாக கீழிறங்கி, வீட்டிற்கு வெளியே சென்று, வாயில்கதவை ஒன்றிக்கு இரண்டு முறை பூட்டிய பிறகுதான், ஓரளவிற்கு சமநிலைக்கு மீண்டேன். அறைக்குள் இந்த நேரத்தில், வேறு யாரும் வருவதற்கு வாய்ப்பேயில்லையே!!

 

வாயில்கதவருகே இருந்த சாலையோரத்து திண்டில் அறையில் நிகழ்ந்த அந்த எதிர்பாராத நிகழ்ச்சியை மனதில் போட்டு உருட்டிக்கொண்டே வெகு நேரம் அமர்ந்திருந்தேன். முழுமன அமைதிக்கு திரும்பியிருக்கிறேன் என நம்பிக்கை வந்தவுடன்தான் அறைக்கு திரும்பினேன். அந்த கைநாற்காலி பக்கமே பார்வையை திருப்பாமல், நேராக சென்று எனது கட்டிலில் படுத்தேன். அறைக்குள் சில மணித்துளிகள், புதிராக எதுவும் நடக்காமல், விறைப்பான அமைதியுடன் கடந்தது. ஆனால் சீக்கிரமே அடக்கமுடியாத ஒரு உந்துதலுக்குள்ளாகி, அறையை சுற்றுமுற்றி நோட்டமிட்டுகக்கொண்டே, மெதுவாக ஆனால், தீர்க்கமாக அந்த மர்ம மனிதன் உட்கார்ந்திருந்த கைநாற்காலியை நோக்கி பார்வையை செலுத்தினேன்.
              அதனருகே கணப்பு தொட்டியில் நெருப்பு அணையப்போவது போல எரிந்துகொண்டிருந்தது. மீதமான சில நெருப்பு கங்குகளின் இளஞ்சிவப்பான ஒளியில், மங்கலாக தெரிந்த அதே நாற்காலியில், அதே போல வலது கையை தொங்க போட்டு, இரண்டு கால்களையும் மடித்து வைத்து, இடது பக்கம் தலை சாய்த்து தூங்கிக்கொண்டிருக்கும், அந்த மர்மமனிதன் மீண்டும் அங்கே அமர்ந்திருப்பது போல இருந்தது!!!
 

உடனே நெருப்புபெட்டியை எடுத்து, தீக்குச்சியை கொளுத்தி, அருகில் சென்று பார்த்தேன், இந்த முறையும் அங்கு யாருமேயில்லை. ஆத்திரத்துடன், அந்த நாற்காலியை கொண்டு போய், என் பார்வைக்கே படாத வகையில், கட்டிலுக்கு பின்னால் மறைத்துவைத்துவிட்டு, அறைமுழுவதும் துளி கூட வெளிச்சமில்லாமல் இருட்டாக்கிக் கொண்டு, மீண்டும் போர்வையை போர்த்தி கட்டிலில் தூங்குவதற்கு படுத்தேன். ஆனால் தூக்கத்தில் அமிழ்ந்த ஒரு சில நிமிடங்களிலேயே, அந்த இரவில் என்னை அச்சுறுத்திய காட்சிகள் அனைத்தும் உண்மையாக கண்முன் நடப்பது போல தெளிவாக கனவில் மீண்டும் தோன்றியது. உடனே அலறியடித்து கொண்டு எழுந்துவிட்டேன், மீண்டும் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை வெகு அருகிலேயே வைத்துக் கொண்டு, தூங்கவே கூடாதென தீர்மானித்து, தீர்க்கமாக படுக்கையிலேயெ அமர்ந்திருந்தேன். ஆனால், என்னையும் மீறி, கொஞ்ச நேரத்திலேயே தூங்கிப்போனேன். அன்றிரவு அதே கனவு பலமுறை வந்து என்னை பைத்தியமாக்கியது. கடைசியாக அதிகாலையில் எல்லாம் சரியாகி, மதியம் வரை அமைதியுடன் தூங்கினேன்.

தூங்கியெழுந்த மறுநாள் மதியம், முந்திய நாள் நிகழ்வுகள் எல்லாம் எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது போல இருந்தது. ”காயச்சலுடன் படுத்ததால், வந்த கெட்டகனவுகள்தான் அவை, அட எவ்வளவு மடத்தனமாக பீதியடைந்தேன். இனிமேல் தைரியமாக இருக்க வேண்டும்!!” எனக்குள் கூறிக்கொண்டேன்.

அன்றைய நாள் முழுவதையும் உற்சாகத்துடன் கழித்தேன். நகரின் எனது மனங்கவர்ந்த உணவகத்திற்கு சென்று, நன்றாக சாப்பிட்டேன். பிறகு திரையரங்கத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினேன். வீட்டிற்கு அருகே வந்தபோதுதான், மீண்டும் அந்த விசித்திரமான அசௌகர்யமான பய உணர்வு மீண்டும் பீடித்தது. அந்த மர்ம மனிதன் மீண்டும் தோன்றலாம் என்ற எண்ணம் அச்சுறுத்தியது. சொல்லப் போனால், அவனிடம் பயமில்லை, அவன் அறைக்குள் இருக்கிறான் என நம்பவுமில்லை, அப்படியே உண்மையில் இருந்தால்கூட ஒன்றும் பயமில்லை, ஆனால் புதிய ரூபத்தில் அந்த அறையில் மீண்டும் மீண்டும் அவன் தோன்றி மறைவானோ என்ற பயம்தான். இனி என்றுமே நிகழக்கூடாது என நினக்கும் அந்த கெட்டகனவுகளின் மீதும் பயம்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக, வீட்டிற்கு முன்னால் நடைபாதையில் இங்குமங்கும் நடந்தேன். அட என்ன மடத்தனம் இது!! என சமாதானம் சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன். ஆனால் அறையை நெருங்க நெருங்க இதயம் பதைபதைப்புடன் துடித்தது, மாடிப்படிகளில் வேண்டாவெறுப்பாக மெதுவாக ஊர்ந்து சென்று, அறையை நெருங்கினேன். அறைக்குள் நுழையப்பிடிக்காமல், பயத்துடன், அங்கு பத்து நிமிடங்களுக்கு மேலாக சுவரில் சாய்ந்து மோவாயை தடவி யோசித்துக்கொண்டிருந்தேன். சரி என்னதான் நடக்கும் என, தெம்பை வரவழைத்துக்கொண்டு, அறையின் கதவில் சாவியை நுழைத்து, பாதிக் கதவை மட்டும் உதைத்து படாரென திறந்தேன். கையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக் கொண்டு, கணப்பு தொட்டியை நோக்கி திக்கிதிணறி நோக்கினேன். ஆ!! அங்கு எதுவுமில்லை.
ஆகா!! என்ன ஒரு விடுதலை!! என்ன ஒரு விமோசனம்!!, இன்றுதான் என்னுடைய வாழ்நாளிலேயே பெருமகிழ்ச்சியான நாள்!! என மனதிற்குள் கூவிக்கொண்டே, இழந்து போன நம்பிக்கையை மீட்டெடுத்த களிப்பில், இங்குமங்கும் குதித்து குதித்து அறையை சுற்றி வந்தேன். ஆனால், எதிர்பாராத நேரத்தில், ஒரு நிழல் போல தெரிந்த அந்த மர்மமனிதனின் வருகை, என் நம்பிக்கையை சுக்கு நூறாக கிழித்தெறிந்து அச்சத்தில் வாயடைக்க செய்தது.
 

அன்றிரவு முழுவதும் தூக்கத்தில் ஒரு இடைவிடாத இரைச்சல் காது முழுக்க ஒலிப்பது போலிருந்தது. அதுதான் நான் கடைசியாக அந்த மர்மமனிதனை பார்த்த இரவு, அதற்குப் பின் அவன் தோன்றவேயில்லை.

ஆம், அன்று முதல்தான் ஒவ்வொரு இரவிலும் தனிமை என்னை அச்சுறுத்தி துரத்துகிறது. என் கண்முன் தோன்றாவிட்டாலும், அந்த ஆவிமனிதன் என்னை எப்போதும் சுற்றி கொண்டுயிருப்பதாக உணருகிறேன். அப்படியே அவன் மீண்டும் வந்தாலும், என்ன ஆகும்? எனக்கு கண்டிப்பாக தெரியும் அப்படி ஒருவன் இல்லவே இல்லை.

ஆனாலும்,  இடைவிடாது துரத்தும் அவனது நினைவுகள் தான் என்னை அச்சமூட்டுகின்றன. “இடது பக்கம் தலையை சாய்த்து, இரண்டு கால்களையும் மடித்து வைத்து, வலது கையை மட்டும் கீழே தொங்கபோட்டு அமர்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.” போதும் நிறுத்து!!  கடவுளின் பெயரால், அவனைப் பற்றி நான் நினைக்கவே விரும்பவில்லை.

ஏன் விடாப்பிடியாக அவனின் நினைவுகள் என்னை துரத்துகின்றன. “தேய்ந்து போன கால்களுடன், நெருப்பிற்கு அருகில் அமர்ந்திருந்தான்”. போதும்!!

ஓயாது நினைவுகளில் வந்து என்னை துரத்தும் அவன். யார்? எங்கிருக்கிறான்? எனக்கு தெரியும் என் மடத்தனமான கற்பனை உலகிலன்றி வேறெங்கும் அவனில்லை. என் துயர்மிகு கெட்ட கனவுகளிலன்றி வேறெங்குமில்லை அவன்.

என்னுடைய வீட்டிற்குள் என்னால் இனிமேல் தனியாக இருக்கவே இயாலாது,  அவன் என் முன்னால் இனிமேல் தோன்றவே மாட்டானென உறுதியாக நான் நம்பினாலும், அவன் அங்கு என் அறைக்குள்தான் இருக்கிறான். என் நினைவிற்குள்தான் இருக்கிறான். கண்ணுக்கு தெரியாவிட்டாலும், இந்த கதவுகளுக்குப் பின்னால், அலமாரிக்குப் பின்னால்,  என் படுக்கைக்கு அடியில், என் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு பின்னால்,  இந்த அறையின் எல்லா இருண்ட மூலைகளிலும் அவன் இருக்கிறான். மெழுவர்த்தியை ஏந்திக்கொண்டு, கதவுகளை திறக்கும்போதும், படுக்கைக்கு கீழே பார்க்கும்போதும், அவன் அப்போதும் இல்லைதான், ஆனாலும் எனக்கு பின்னால் அவன் இருப்பதை நான் உறுதியாக உணருகிறேன். திரும்பி திரும்பி சுற்றி பார்த்தாலும் அவன் அறுதியாக இல்லைதான், ஆனால் எப்போதும் என் பின்னால் அவன் இருப்பதாகவே தொன்றுகிறது. இது மடத்தனம், பைத்தியக்காரத்தனம், ஆனாலும் என்னால் என்ன செய்ய இயலும்? ஆம், அந்த அறையில் எனக்கு துணையாக இன்னொருவர் இருந்தால் மட்டுமே, அவன் அந்த அறைக்கு மட்டுமல்ல, என் நினைவிற்கே வரமாட்டான். ஆம். நான் அங்கு தனியாக இருப்பாதால் மாத்திரமே அங்கு இருக்கிறான்.

<முற்றும்>